நவீன மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்

நவீன மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் என்று மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் கூறினார்.
நவீன மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக ஆஸ்துமா தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) டாக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

ஆஸ்துமாவுக்கு தனியார் மருத்துகடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. அப்படி மருத்துவம் செய்து கொள்வது காசு கொடுத்து விஷம் வாங்கி சாப்பிடுவதற்கு சமம். இதுபோன்ற மாத்திரைகளால் தான் பக்க விளைவுகள் ஏற்படும்.

அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற டாக்டர்களால் ஆஸ்துமாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பயனுள்ள தகவலை இங்கு வந்திருப்பவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக நேரம் புகை வரும் இடங்களில் நிற்பவர்கள், நிலக்கரி சுரங்கங்களில் பணி புரிபவர்கள், எங்கு தூசி அதிகமாக உள்ளதோ அங்கு இருப்பவர்கள் ஆகியோருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரம்பரை காரணத்தாலும் ஆஸ்துமா ஏற்படும். ஆஸ்துமா உள்ளவர்கள் ஜுரம், சளி ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஆஸ்துமாவை நவீன மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com