

செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் நவகுமார் (வயது 36). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இவள், அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று காலை நவகுமார், வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி கவுசல்யா, வீட்டை பூட்டி விட்டு மகளை பள்ளியில் விடுவதற்காக சென்று விட்டார்.
மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த கவுசல்யா, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டுப்போய் இருப்பது தெரிந்தது. கவுசல்யா வீட்டை பூட்டி விட்டு மகளை பள்ளியில் விடுவதற்காக சென்ற அந்த நேரத்தில், யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.