

பூந்தமல்லி,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைத்து ஓட்டு போட செய்யும் வகையிலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாக்களிக்க வருமாறு நகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி நகராட்சி கமிஷனர் வசந்தி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஒரு எவர்சில்வர் தட்டில் பூ, வாழைப்பழம், கொய்யாப்பழம், சப்போட்டோ, சாத்துக்குடி உள்ளிட்ட பழவகைகளுடன் வெற்றிலை, பாக்கு என சீர்வரிசை பொருட்களுடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் வழங்கி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வரும்படி அழைத்தனர்.
திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளின் இந்த நூதன விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.