திருச்சி மாநகரில் கிறிஸ்துமஸ் விழா: கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி

திருச்சி மாநகரில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி நேற்று நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.
திருச்சி மாநகரில் கிறிஸ்துமஸ் விழா: கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி
Published on

திருச்சி,

ஏசு கிறிஸ்து பிறந்த நாளை கிறஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி, பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

திருச்சி மேலபுதூர் புனித மரியன்னை பேராலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுறுத்தலின் பேரில் சமூக விலகலை கடைப்பிடித்தும், பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்தும், ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வந்தும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

வாழ்த்துகள் பரிமாற்றம்

திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பாலக்கரை சகாயமாதா பசிலிக்காவில் பாதிரியார் ஆரோக்கியராஜ் தலைமையில், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை மைக்கேல் ஜோ தலைமையிலும், கிராப்பட்டி தேரேசாள் ஆலயத்தில் பங்குதந்தை லாரன்ஸ் தலைமையிலும், கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலயத்தில் பங்குதந்தை பால்ராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.

பல்வேறு கிறிஸ்தவ ஆலயம்

இதுபோல திருச்சி மெயின்காட் புனித லூர்து அன்னை ஆலயம், எடத்தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஏர்போர்ட் புனித அந்தோணியார் ஆலயம், நாகமங்கலம் இறை இரக்கத்தின் ஆண்டவர் ஆலயம், கே.கே.நகர் ஜெகன்மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் பங்கு தந்தையர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது.

மேலும் திருச்சி மாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கேக் விற்பனை அமோகம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை புனித மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதுபோல அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடக்கிறது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் கேக்' விற்பனை அமோகமாக நடந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடப்பதால் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கேக்' விற்பனை சற்று குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com