

சேலம்:
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சிவகுமார் (வயது 26). இவர் அந்த பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நிவேதா (20). இவர், சேலம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் நிவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று சிவகுமார்-நிவேதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி சுக்கம்பட்டியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரை அழைத்து போலீசார் சமரசம் செய்து வருகின்றனர்.