

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 64 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இன்று (சனிக்கிழமை) 22-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென ஊரகப்பகுதியில் 1,187 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,392 தடுப்பூசி மையங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் முழுமையாக உருவாகும் என்றும், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.