

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மணி (வயது 39). இவர் ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். படை வீரராக பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் படைவீரர்களுடன் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் இந்த வாகனத்தில் மோதியதில் படைவீரர் மணி பலியானார். இதையடுத்து, அவரது உடல் சிறப்பு விமானத்தில் சென்னை கொண்டுவரப்பட்டு சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
அவரது உடலுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், உறவினர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் நாசர், தி.மு.க. மாவட்ட செயலாளர் பூபதி, திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த படைவீரர்கள் 36 பேர் இங்கு வந்து ராணுவ மரியாதை செலுத்தினார்கள். இறுதியாக 21 குண்டுகள் முழங்க படை வீரர் மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. தினகரன், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரினீத் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.