

மங்களூரு,
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஏடாடி மத்தியாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதுகர் ஷெட்டி. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி மையத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மதுகர் ஷெட்டியின் உடல் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது. அங்கு மந்திரி யு.டி.காதர், கலெக்டர் சசிகாந்த் செந்தில், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் மற்றும்உயர்போலீஸ் அதிகாரிகள் மதுகர் ஷெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவருடைய உடல் நேற்று அதிகாலையில் மதுகர் ஷெட்டியின் சொந்த ஊரான உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஏடாடி மத்தியாடி கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உடுப்பி மாவட்ட கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மதுகர் ஷெட்டியின் குடும்பத்தினர், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க மதுகர் ஷெட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நேற்று காலை வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுகர் ஷெட்டியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.