

வேதாரண்யம்,
நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசை ஆதரித்து வேதாரண்யத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா தலைமையிலான அரசு என்று கூறிக்கொண்டு சந்தர்ப்பவாத கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் நலனுக்கு எதிரானது. தேர்தல் முடிவுக்கு பின்னர் சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகளின் சாயம் வெளுக்கும். டெல்லியில் மட்டும் அல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை பார்வையிட மோடி வரவில்லை. ஆனால் அவர் போகாத நாடு இல்லை. கஜா புயல், வர்தா புயல் என எந்த புயலாக இருந்தாலும் மோடி எனும் புயலை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் புயல் வேறு கிடையாது. கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்ற எண்ணம் மோடிக்கு வராமல்போனது மிகவும் வேதனைக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காமராஜ், பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.