தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்,

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தும் இதுவரை வழங்கவில்லை. இதை உடனடியாக வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினரும் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். அந்த வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டலத்தலைவர் மூர்த்தி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி போனஸ் உடனே வழங்கிட வேண்டும். பண்டிகைக்கால முன்பணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் விழுப்புரத்தில் உள்ள 3 பணிமனைகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம், செஞ்சி, திண்டிவனம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் பணிமனைகள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com