திருப்பூரில் நொய்யல் ஆற்றில் தண்ணீருடன் சென்ற சாயக்கழிவுநீர்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் தண்ணீருடன் சாயக்கழிவுநீர் கலந்து சென்றது.
திருப்பூரில் நொய்யல் ஆற்றில் தண்ணீருடன் சென்ற சாயக்கழிவுநீர்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக திருப்பூரில் குறிப்பிட்ட நாட்கள் நிறுவனங்கள் இயங்க தடையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தொழில்துறையினரின் தொடர் கோரிக்கையை ஏற்று, தற்போது நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் இயங்காத காலத்தில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் உள்பட எந்த கழிவுகளும் கலக்காமல் நொய்யல் ஆறு சுத்தமாக இருந்தது. இதற்கிடையே நேற்று நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீருடன் சாயக்கழிவுநீர் கலந்து சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நொய்யல் ஆற்றில் நிறுவனங்கள் இயங்காத காலத்தில் தண்ணீர் சுத்தமாக செல்கிறது. தற்போது நிறுவனங்கள் இயங்க தொடங்கிய நிலையில் ஆற்றில் சாயக்கழிவுநீர் சென்றது வேதனையாக உள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com