எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில் செல்போன் திருட்டு ‘டிப்-டாப்’ ஆசாமி கைது

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் இருந்து செல்போன்கள் திருட்டு போவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில் செல்போன் திருட்டு ‘டிப்-டாப்’ ஆசாமி கைது
Published on

சென்னை,

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுப், சரோஜ் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது டிப்-டாப் ஆசாமி ஒருவர் பயணிகளின் செல்போனை அபேஸ் செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டனர். அவரை பிடிப்பதற்காக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மதுரையில் இருந்து சென்னை வந்திருந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி கிருஷ்ணமணி(வயது 60) பயணிகள் ஓய்வறையில் தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

அவருடைய செல்போனை டிப்-டாப் ஆசாமி அபேஸ் செய்துவிட்டு தப்ப முயன்றார். அப்போது தனிப்படை போலீசார் பிடியில் டிப்-டாப் ஆசாமி கையும், களவுமாக சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராமர்(34) என்பதும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com