உள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுங்கள் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேச்சு

உள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுங்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
உள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுங்கள் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேச்சு
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கோவிந்த் கார்ஜோள் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி இருந்தபோது 2012-13-ம் ஆண்டு அரசியல் சாசனப்படி உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அது என்ன? ஆனது என்று தெரியவில்லை. உள் இடஒதுக்கீட்டுக்காக நடைபெறும் போராட்டம் குறித்து சிலர் தவறான கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

இதனால் அந்த போராட்டத்தை நடத்துபவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். யாரும் பயப்படாமல், சோர்வு அடையாமல் தொடர்ந்து போராட வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நமது நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் அவ்வளவு சீக்கிரமாக நாட்டை விட்டு வெளியேறவில்லை. ஆனால் தொடர் போராட்டங்களின் விளைவாக கடைசியில் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அதேபோல் உள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுங்கள். கண்டிப்பாக ஒருநாள் வெற்றி கிடைக்கும். சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் பயன் இல்லை. அனைவரும் ஒன்றுகூடி ஒரே அமைப்பின் கீழ் போராட்டம் நடத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

உள் இடஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் எங்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் நோக்கம் அல்ல. மற்ற சமுதாயங்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தவில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இடஒதுக்கீட்டின் பலனை பெற வேண்டும் என்பது தான் அந்த போராட்டத்தின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com