

சென்னை,
சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) உள்ளது. இங்கு, ராணுவத்தில் சேரும் அதிகாரிகளுக்கு 11 மாத போர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பாண்டில் 257 ராணுவ அதிகாரிகள் போர் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களின் பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து, பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர்.
இதில், மூத்த ராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து, தலைமை பயிற்சியாளர் மேஜர் ஜெனரல் வி.டி.சவ்குலே நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பாண்டில் இந்தியாவை சேர்ந்த 198 மாணவர்கள், 37 மாணவிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 19 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 257 ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு பெற்று உள்ளது.
அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.