புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய பிரதேசம், குஜராத் மாநில எல்லை வரை இலவச பஸ் சேவை - மராட்டிய அரசு அறிவிப்பு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநில எல்லை வரை இலவச பஸ் சேவை வழங்குவதாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய பிரதேசம், குஜராத் மாநில எல்லை வரை இலவச பஸ் சேவை - மராட்டிய அரசு அறிவிப்பு
Published on

மும்பை,

அவுரங்காபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசத்துக்கு நடைபயணமாக சென்றபோது தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 தொழிலாளர்கள் சரக்கு ரெயில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் செல்ல வசதியாக மராட்டியத்தில் இருந்து குஜராத், மத்திய பிரதேச மாநில எல்லைகளுக்கு இலவசமாக பஸ் சேவையை இயக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முடிவில் பிடிவாதமாக இருப்பதை மாநில அரசு அறிந்து உள்ளது. எனவே மாநில அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று(செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட பஸ் சேவைகளை இயக்க உள்ளது.

இந்த பஸ்கள் போரிவிலியில் இருந்து குஜராத் எல்லை வரையிலும், நாசிக், துலே பகுதியில் இருந்து மத்திய பிரதேச மாநில எல்லை வரையிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான செலவை அரசே ஏற்கும்." என்றார்.

இதேபோல இந்தி நடிகர் சோனு சூட்டும் வெளிமாநில தாழிலாளர்களுக்கு உதவி உள்ளார்.

அவர் தனது சொந்த செலவில் நூற்றுக்கணக்கான கர்நாடக மாநில தொழிலாளர்களை அவர்களின் ஊருக்கு தானேயில் இருந்து 10 பஸ்களில் அனுப்பி வைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com