

திருப்பரங்குன்றம்,
மதுரை எல்லீஸ்நகர் போடிலைன் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று மதியம் மதுரையில் இருந்து திருநகருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு ஒரு அரசு பஸ் வந்தது. திருப்பரங்குன்றம் ரவுண்டா அருகே வந்த போது பஸ் திடீரென்று தடம் மாறி மாற்று ரோட்டிற்கு சென்றது. அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சுந்தர் மீது பஸ் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் பகுதியில் இருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து திருமங்கலத்திற்குமாக செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம் ரவுண்டானாவை சுற்றி சென்று வருகின்றன. ஆனால் நேற்று அரசு பஸ் முறையாக செல்லாததால் பரிதாபமாக கட்டிட காண்டிராக்டரின் உயிர் பறிபோனது. பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டி செல்வது டிரைவரின் கடமை. ஆனால் நேற்று அரசு பஸ் டிரைவர் போக்குவரத்து விதியை மீறி எந்த மனநிலையில் வாகனத்தை ஓட்டி வந்தார் என்று தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்வதோடு அரசு பஸ் டிரைவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.