

தஞ்சாவூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் 4-வது நாளான நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் மத்தியில், கூட்டமைப்பு மாநில நிர்வாகிகளை தமிழகஅரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என மாவட்ட நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து தஞ்சை காந்திசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 900 பெண்கள் உள்பட 1,200 பேரை போலீசார் கைது செய்து மினிபஸ்கள், போலீஸ் வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேசினர்.