“அரசு திட்டங்கள் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்”

குமரி மாவட்ட புதிய கலெக்டராக பிரசாந்த் எம்.வடநேரே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கூறும் போது, “அரசு திட்டங்கள் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்“ என்றார்.
“அரசு திட்டங்கள் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்”
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டராக இருந்த சஜ்ஜன்சிங் சவான், தாட்கோ மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரசாந்த் எம்.வடநேரே, குமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்புகளை இடம் மாறுதலாகிச் செல்லும் சஜ்ஜன்சிங் சவான், புதிய கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகளும் புதிய கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் பல சிறப்புகளை கொண்டது. இந்திய அளவில் மட்டும் இன்றி உலக அளவிலும் புகழ்பெற்ற மாவட்டம் ஆகும். குமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும். மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்தின் பங்கு மட்டும் முக்கியம் அல்ல. பொதுமக்களின் பங்கும் தேவை. எனவே மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் இணைந்து முயற்சி செய்வோம். இந்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com