

திண்டுக்கல்:
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று திரண்டனர்.
பின்னர் நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ், ரெயில் பாஸ் அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வாரந்தோறும் நடத்தப்படும்.
இந்த முகாமில் குறைந்தபட்சம் 50 பேருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் 20 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்குகின்றனர். இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே 50 பேருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களுடன் மருத்துவமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பரிந்துரை செய்தால் 50 பேருக்கு வழங்குகிறோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.