கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
Published on

கம்பம்:

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கம்பத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டார தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் பன்னீர்வேல், ஓய்வூதியர் சங்க நிர்வாகி நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, கம்பத்தில் காதுகேளாதோர், வாய்பேசாத இயலாதவர்களுக்கான சிறப்பு அரசு பள்ளியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், உதவித்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் செந்தில் ஆகியோர் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com