

டி.என்.பாளையம்,
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே மாக்கம்பாளையம் மலை கிராமம் உள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து மாக்கம்பாளையம் செல்லவேண்டும் என்றால் 2 ஓடைகளை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் நேற்று பகல் 3 மணி வலை மாக்கம்பாளையத்தில் கடும் வெயில் அடித்தது. அதன்பின்னர் 4 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாலை 5.30 மணி வரை மழை பெய்தது.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மீண்டும் மழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது.
சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாக்கம்பாளையத்தில் ரோட்டு ஓரத்தில் இருந்த மரங்கள் முறிந்து ரோட்டிலேயே விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது. மழை நீரால் 2 ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மாக்கம்பாளையம் செல்லவேண்டிய பஸ் குரும்பூர் வரை மட்டுமே செல்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுவருகிறார்கள். குன்றி, கோட்டமாளத்திலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.