

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி, இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு குளோரியா வரவேற்றார். அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோ ரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு 302 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 69 ஆயிரத்து 500 மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 180 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசுகையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகம் எண்ணற்ற திட்டங்களை வழங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 46.9 சதவீதம் பேர் உயர் கல்வி படித்து வருகிறார்கள். தமிழக அரசு வழங்க கூடிய திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டு தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரேசன், மாநில நிள வளவங்கி தலைவர் சாகுல் அமீது, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் நன்றி கூறினார்.