கிரு‌‌ஷ்ணகிரியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

கிரு‌‌ஷ்ணகிரியில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
கிரு‌‌ஷ்ணகிரியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சலாவுதீன். வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் நவ்சீன் என்ற பெண் குழந்தை இருந்தாள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நவ்சீனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். இருந்த போதிலும் அவளுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிறுமிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கும் காய்ச்சல் குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு நவ்சீன் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி நவ்சீன் பரிதாபமாக இறந்தாள்.

கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பகுதியில் மர்ம காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com