

ராயபுரம்,
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கவும், சிறு தொழில் மீனவ சமுதாய வாழ்வாதாரம் மேம்படவும், கடலில் மீன்வளம் அதிகரிக்கவும் செயற்கை பவள பாறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மீனவ தொழிலாளர் சங்கத்தினரும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு மீன்வள துறை, மத்திய சுற்றுசூழல் துறை, யு.என்.டி.பி., சி.இ.இ. ஆகிய துறைகளின் அனுமதி பெற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் செயற்கை பவள பாறைகளை தயார் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 140 செயற்கை பவள பாறைகளை விசைப்படகுகளில் ஏற்றி 4 நாட்டிகல் மைல் தொலைவுக்கு கொண்டு சென்று மீனவர்கள் செயற்கை பவள பாறைகளை கடலில் போட்டனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை இயக்குனர் ஆண்டோ ஆசீர்வாதம், தொண்டு நிறுவன இயக்குனர் ஆர்.டி.ஜான்சுரேஷ், மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.