நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திடீர் ஆய்வு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்களின் விவரம் கணினிமயமாக்கும் பணி ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திடீர் ஆய்வு
Published on

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டப் பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களின் விவரங்களையும், அவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண விவரங்களையும் முழுமையாக கணினியில் பதிவு செய்து அதனை வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், தேனாம்பேட்டை எஸ்டேட் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடியிருப்புதாரர்களின் விவரங்கள் சேகரித்தல், கட்டணத் தொகை வசூலித்தல் மற்றும் பதிவுகளை பராமரித்தல் விற்பனை பத்திரம் வழங்குவது தொடர்பான கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வாரிய தலைமையிட அதிகாரிகளும் இப்பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்து விவரங்களை கணினிமயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்த ராவ், வாரிய செயலாளர் துர்காமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் ஆர்.எம்.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com