

திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள பகுதியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில் மருத்துவமனையின் டீன் டாக்டர் மேரிலில்லி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, மருத்துவமனை இருக்கை அதிகாரி (ஆர்.எம்.ஓ) டாக்டர் கருணாகரன், மருத்துவமனை உதவி இருக்கை அதிகாரி டாக்டர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். இது குறித்து மருத்துவமனையின் டீன் டாக்டர் மேரிலில்லி கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள இடத்தில் இளம் பருவ குழந்தைகளுக்கான நோய்கள், குறைபாடுகள், பிறவிக்கோளாறுகள் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த 7 மரங்கள் முன்னதாக வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்கனவே முடிவு செய்தோம். அதற்காக வேம்பு, புங்கை, செவ்வாகை ஆகிய மரக்கன்றுகள் 100 வாங்கினோம். அதில் தற்போது முதற்கட்டமாக 30 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மீதமுள்ள மரக்கன்றுகளை விரைவில் நடுவோம் என்றார்.