

குடியரசு தினம்
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், வழிப்பாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ரெயில்வே துறையின் மூத்த பாதுகாப்பு கோட்ட ஆணையர் செந்தில்குமரன் உத்தரவின்பேரில் இணை ஆணையர் பிரித் அறிவுறுத்தலின் பேரில் நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வெடிகுண்டு சோதனை கருவி மற்றும் மோப்ப நாய்களை கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிர சோதனை
மேலும் இந்த சோதனை ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் ரெயில் நிலைய தண்டவாளம் மற்றும் நடைமேடை பகுதிகளிலும் ரெயில் நிலைய வளாகம் முழுவதிலும் பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்ட்டர், நடைமேடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில் பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.