

பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் சோதனை
சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து பிரசாரத்திற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி நகரம், ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளியூரை சேர்ந்த நபர்கள் யாராவது தங்கி உள்ளனரா? என்று சோதனை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் விடுதிகளில் தங்கி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
தேர்தல் பிரசாரத்திற்காக வெளியூர்களில் இருந்து வந்து சிலர் தங்கி இருந்தனர். இந்த நிலையில் இறுதி கட்ட பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் விடுதியில் தங்கும் நபர்கள் குறித்த முழுவிவரத்தையும் சேகரிக்க வேண்டும்.
எதற்காக வந்து இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கி உள்ளனர் என்பது போன்ற தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பிரசாரத்திற்காக வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் தங்கி இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வாக்களார்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.