தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டி டி.டி.வி.தினகரன் பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட போவதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டி டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

கன்னியாகுமரி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று காலை 10.30 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். தொடர்ந்து காலை 11 மணி அளவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் டி.டி.வி.தினகரன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நான் சுற்றுபயணம் செய்து வருகிறேன். இதன்மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதாவின் பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் கட்சியில்தான் உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும்.

இரட்டை இலை சின்னத்துக்காக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க. பெரிய வெற்றியை பெற போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்க போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதேமாதிரி பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com