ஜல்லிக்கட்டு காளை... துள்ளி வரும் வேளை...

‘வாடிவாசல் திறக்கும் வரை வீடுவாசல் செல்ல மாட்டோம்’ இது கடந்த ஜனவரி மாத மத்தியில் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானவர்கள் ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தின் போது எழுப்பிய கோஷம்.
ஜல்லிக்கட்டு காளை... துள்ளி வரும் வேளை...
Published on

இந்த கோஷம் பலதரப்பட்டவர்களையும் தமிழர்கள் பக்கம் திரும்பச்செய்தது. அதன் பலனாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் தைப்புரட்சி, மெரினா புரட்சி, இளைஞர்கள் புரட்சி என்று ஊடகங்களாலும், சில அரசியல் கட்சி தலைவர்களாலும் பெருமையுடன் குறிப்பிடப்பட்டது.

அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.

தமிழனின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி, கடந்த ஆண்டு தாமதமாக ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஆண்டு பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது. ஆனால் நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆக, ஜல்லிக்கட்டு தடையை உடைத்து எறிந்து ஓராண்டை நிறைவு செய்து இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் ஜல்லிக்கட்டை கொண்டாட தமிழக இளைஞர்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகள், காளையர்கள் மீதான எதிர்பார்ப்பும், மரியாதையும் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது.

கடும் போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் வழக்கத்தை விட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தை மாதம் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு தங்கள் காளைகளை தயார் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com