

மேல்மலையனூர்,
மேல்மலையனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சாத்தாம்பாடி கிராமத்தில் நடந்தது. இதற்கு ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி ஏழுமலை முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். விழாவுக்கு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி, 3 ஆயிரத்து 70 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடி வருகிறோம். ஜெயலலிதா இறுதியாக சட்டசபையில் நான் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று பேசினார். அப்போது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். தற்போது தான் தெரிகிறது பல பேர் அ.தி.மு.க.வை உடைக்கப்பார்க்கிறார்கள். அது கடைசி தொண்டன் இருக்கும் வரை நடக்காது. அன்று மக்களுக்காக ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களையே, தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். இன்று முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை செயல் படுத்தி காட்டி இருக்கிறார். மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் அ.தி.மு.க. அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும்.
இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துளசி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், சாத்தாம்பாடி கூட்டுறவு கடன் சங்க தலைவர் சத்தியராஜ், மாவட்ட அ.தி.மு.க. பாசறை துணை செயலாளர் அருண்தத்தன், ஒன்றிய பாசறை தலைவர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பன், முகமதுஷபி, ஊராட்சி செயலாளர்கள் பாலா, சிலாவுதீன், ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.