

ஊத்துக்குளி,
தொழிலாளர் துறையின் சார்பில் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஊத்துக்குளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் நேற்று உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு திருப்பூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் த.முருகேசன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி தாசில்தார் ரவீந்திரன், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
முகாமில் ஏராளமான தொழிலாளர்களிடம் இருந்து உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 118 தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிய உறுப்பினர்களாக சேர்க் கப்பட்டனர். மேலும், 36 உறுப்பினர்களின் பதிவு புதுப்பிக்கப்பட்டு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடந்தன. இந்த முகாமில் திருப்பூர் 2-ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், அலுவலக உதவியாளர்கள் சுரேஷ்குமார், சங்கர், ஊத்துக்குளி வருவாய் ஆய்வாளர் சாந்தி, மற்றும் கிராமநிர்வாக அதிகாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.