

கிருஷ்ணகிரி,
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். அதேபோல நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் மரத்தடியில் அமர்ந்தபடி பேசி பொழுதை கழித்தனர். மேலும் கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி பூங்காவில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது சல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்தனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியிலும் காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள்காலை முதல் மாலை வரையில் பொழுதை கழித்து சென்றனர். கடந்த காலங்களில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த சம்பவங்கள் நடந்தன. இதனால் ஓசூர் அணையில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர்.