

குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய கலை. அந்த கலை பெரும்பாலானவர் களுக்கு தெரியாததால், குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று மணிக்கணக்கில் அவர்கள் பின்னால் சுற்றுகிறார்கள். அப்படி சுற்றுகின்ற தாய்மார்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால்போதும், குழந்தைகளை சாப்பிடவைத்துவிடலாம்.
குழந்தைகளை கூடுமானவரை சுயமாக எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்களை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர்கள் செய்வது போன்ற அனைத்து செயல்களையும் தானும் செய்யவேண்டும் என்று முயற்சிக்கும். அவர்கள் சுயமாக சாப்பிடுவதை பார்த்துவிட்டு, தானும் அதுபோல் சாப்பிடவே விரும்பும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதை அனுமதிப்பதில்லை. காரணம் குழந்தைகள் உணவை சுற்றிலும் இறைத்து விரயமாக்கும் என்பதுதான்.
எல்லா முதல் முயற்சிகளிலும், எல்லோருக்கும் சிறிதளவில் ஏதாவது விரயம் ஏற்படத்தான் செய்யும். குழந்தைகளின் சாப்பாட்டு பயிற்சியில் ஓரளவு விரயத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முதன் முதலில் தனியே சாப்பிட முயற்சிக்கும்போது குழந்தைகளால் சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். சாப்பாட்டிலும், தட்டிலும் கவனத்தை செலுத்தமுடியாது. குழந்தை ஓரளவு சுயமாக சாப்பிட கற்றுக்கொண்ட பின்பு, கீழே சிதறாமல் நான் சாப்பிடுவதுபோல் நீயும் சாப்பிடவேண்டும் என்று கூறி, விரயம் ஏற்படுவதை தவிர்க்க முன்வரவேண்டும். கீழே சிந்தாமல் குழந்தையை சாப்பிடத் தூண்டுவதும், கீழே சிந்திவிட்டால் குற்றம்சாட்டுவதும் கூடாது. ஏன்என்றால் உணவு கீழே சிந்தும்போதுதான், சிந்தாமல் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும். குழந்தை உணவை கீழே சிந்திக்கொண்டு, அதை பார்த்தபடி சாப்பிடுவது அதன் மனோவளர்ச்சியை பலப்படுத்தும் விஷயம்.
குழந்தை நல மருத்துவர்கள், குழந்தைகளை தானாகவே எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அது அவர்கள் விருப்பத்தை தூண்டி அறிவை வளர்க்கும். தன்னுடைய தேவை எது என்பதை பற்றி அவர்களை யோசிக்க வைக்கும். ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியை சோதிக்க அதனை சாப்பிடவைத்து பார்ப்பது ஒருவித வழிமுறையாகும். தானே எடுத்து சாப்பிடும் குழந்தைகளின் மனோவளர்ச்சி சீராக இருப்பதாக அர்த்தம் என்று கூறுகிறார்கள்.