

கன்னியாகுமரி,
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில், காதலர்கள் தங்கள் காதலை நினைவு கூறவும், புதிய காதலர்கள் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தியும் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் சந்தித்து பரிசு பொருட்களை கொடுத்து தங்கள் காதலை வளர்த்தனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் நேற்று உள்ளூர் மற்றும் கேரள மாநில காதல் ஜோடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த காதல் ஜோடிகள் கடற்கரையில் நின்றபடி ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை கொடுத்ததை காணமுடிந்தது.
சில ஜோடிகள் கடற்கரை பாறைகளிலும், பூங்காக்களிலும் சந்தித்து செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது சில காதல் ஜோடிகள் முத்தமிட்டபடி தங்களுடைய காதலை உற்சாகமாகவும் வெளிப்படுத்தினர்.
போலீசார் கண்காணிப்பு
காதலர் தினத்தன்று கன்னியாகுமரியில் பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். இதையொட்டி போலீசார் கடற்கரை, பூங்காக்களில் ரோந்து சுற்றி காதல் ஜோடிகள் அத்துமீறாமல் கண்காணித்தனர். இதே போல் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா, சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களிலும் காதல் ஜோடிகள் குவிந்தனர்.