மக்காச்சோள மகசூல் குறைவு

மழைநீர் தேங்கியதால் மக்காச்சோள மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மக்காச்சோள மகசூல் குறைவு
Published on

தாயில்பட்டி,

மழைநீர் தேங்கியதால் மக்காச்சோள மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

வெம்பக்கோட்டை, குகன் பாறை, செவல்பட்டி, சிப்பிப்பாறை, வெற்றிலையூரணி, சல்வார்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் 5,000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் ரூ. 1,750-க்கு விலை போனதால் அறுவடைக்கு பின்னர் மேலும் விலை கூடும் என்ற ஆர்வத்தில் விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்தனர்.

மகசூல் குறைவு

இதுகுறித்து எட்டக்காபட்டி விவசாயி தர்மராஜ் கூறியதாவது:-

சென்ற ஆண்டு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு மக்காச்சோளம் கதிர் வரும் சமயத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் மகசூல் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளோம்.

இதனால் ஏக்கருக்கு 15 குவிண்டால் மட்டுமே மக்காச்சோளம் கிடைத்தது. விலை இருந்தும் எதிர்பார்த்திருந்த விளைச்சல் குறைவால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளோம். மேலும் அனைவரும் ஒரே சமயத்தில் அறுவடை செய்ததால் தானியங்களை பிரிக்க போதிய நெல்களம் இல்லாமல் விவசாய நிலத்திலும் தரம் பிரிக்க வேண்டிய நிலைமையில் விவசாயிகள் உள்ளோம்.

நிவாரண தொகை

மேலும் அறுவடை எந்திரம் சென்ற ஆண்டு ரூ.1,500 வாடகை வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ. 1,800 ஆக உயர்த்தி விட்டனர்.

மேலும் தொழிலாளர்கள் கூலியும் உயர்ந்ததால் இதனால் குவிண்டாலுக்கு ரூ.2000 விலை போனால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், குவிண்டால் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com