

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனம் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இந்த பகுதியில் 21 மீனவ கிராமங்கள் உள்ளன. எனவே மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் கெமிக்கல் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. இதன்காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இதேபோன்று தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல் நிறுவனம், கோத்தாரி பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஆகியவையும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி இந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக இடைக்காலமாக மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.2 கோடியும், தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியும், கோத்தாரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.