மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

மராத்தா சமுதாய இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அவுரங்காபாத்தில் காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் ஆற்றில் குதித்தும், ஜெகநாத் சோனவானே என்பவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டம் மும்பை உள்பட பல இடங்களில் வன்முறையாக மாறியது.

பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், பொது சொத்துகள் அடித்து சூறையாடப்பட்டன. வன்முறையில் காயம் அடைந்த நவிமும்பை வாலிபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதனால் பதற்றம் நீடிக்கிறது.

இந்தநிலையில் மராத்தா மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். எனவே நிலைமையை சீர்செய்யும் வேலையில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்காக இன்று (சனிக்கிழமை) மும்பை விதான் பவனில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், சுபாஸ் தேஷ்முக் மற்றும் கட்சியின் மாநில தலைவர் ராவ் சாகேப் தன்வே ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com