

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மூடப்படும் அபாயம்
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை அவசர சட்டமாக அரசு கொண்டு வந்துள்ளது. சட்டசபை, மேல்-சபையில் விவாதிக்காமல் இந்த சட்டத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்த அவசர சட்டத்தால் விவசாயத்துறை பெரிய அளவில் பாதிக்கும். பால் உற்பத்தி குறையும்.
கர்நாடகத்தில் 42 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பசுவதை தடை அவசர சட்டத்தால் பால் உற்பத்தி மற்றும் தோல் தொழில் கடுமையாக பாதிக்கும். நாம் பயன்படுத்தும் காலணிகள், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள் போன்றவை தோலால் தான் செய்யப்படுகிறது. இந்த அவசர சட்டத்தால் தோல் தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேடுவது சரியல்ல
புதிய வகை கொரோனா பரவல் விஷயத்தில் மக்களிடையே உள்ள பயத்தை அரசு போக்க வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை நடமாட விட்டுவிட்டு, தேடுவது சரியல்ல. அவர்கள் வருவதற்கு முன்பே விமான நிலையத்தில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். தர்மேகவுடாவை பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கட்டாயப்படுத்தி மேலவை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை.
ஆனால் இந்த விஷயத்தில் குமாரசாமி கூறும் கருத்துகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். அவர் பொய் பேசுகிறார்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.