சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் கார்- வேன் மோதல், 14 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் காரும், வேனும் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் கார்- வேன் மோதல், 14 பேர் படுகாயம்
Published on

சாத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள திருவேங்கடத்தைச் சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக காரில் வந்தனர். இந்த கார் சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது எதிரே மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்பும் வேன் ஒன்று வந்தது.

பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வரும்போது பணம் நிரப்பும் வேன், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவற்றில் மோதியது. இதில் டயர் வெடித்து நிலைதடுமாறி எதிர்திசையில் வந்த காரின் மீது மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த சின்னக்காலம்பட்டி திருவேங்கடத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு (வயது25), காரில் வந்த திருவேங்கடத்தை சேர்ந்த கனகராஜ் (39), அவருடைய குழந்தை ரித்திஹா (3) சுப்பாராஜ் மனைவி சங்ரேஸ்வரி(42), மகன் கிருத்திக்(10), மங்கத்தாய்(60), சுரேந்திரன்(20), நிவேஷ்குமார்(16), விஜயலட்சுமி(35), நேகாஸ்ரீ(10) ஆகிய 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் வேனை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது(45) உடன் வந்த மதுரையை சேர்ந்த மாரியப்பன்(51), சரண்ராஜ் (27) மற்றும் பந்தல்குடியை சேர்ந்த ராஜபாண்டி (51) ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com