விக்கிரவாண்டி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 11 பேர் கைது

விக்கிரவாண்டி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 11 பேர் கைது
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரம் முடிந்த பின்னர் அதில் கலந்துகொண்ட மூங்கில்பட்டு காலனி தரப்பை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மூங்கில்பட்டுக்கு திரும்பினர்.

அப்போது கிராமத்தின் வழியாக சென்றபோது அவர்கள் கோஷம் எழுப்பியபடி வேனில் வேகமாக சென்றனர். இதை கிராம மக்கள் சிலர் தட்டிக்கேட்டனர். இதனால் இரு தருப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராம்கி (26), செல்வராஜ் (50), டேவிட் (28) மற்றும் புருஷோத்தமன் (40), தரணிஸ்ரீ (12), ராஜதுரை (23) ஆகியோர் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் இரு தரப்பையும் சேர்ந்த 27 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் இரு தரப்பையும் சேர்ந்த சுரேஷ் (40), கமல் (29), சதீஷ் (23), குமரன் (23), அய்யனார் (30) மற்றும் பாரதி (23), வல்லரசு (22), விமல்ராஜ் (22), தமிழ்செல்வன் (24), அம்பேத்கர் (26), உத்திரவேல் (27) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com