

விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சக வளாக கட்டிடத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் அச்சுப்பணி பயன்பாட்டிற்காக ரூ.15.87 லட்சம் மதிப்பிலான புதிய கம்ப்யூட்டர் சீட் அச்சடிக்கும் எந்திரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து தெரிவித்ததாவது:- மாவட்டத்தில் தனியாக கூட்டுறவு அச்சகம் 29.11.1992-ல் ஆரம்பிக்கப்பட்டது. நமது மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான புத்தகபாரங்கள், படிவங்கள், பதிவேடுகள் ஆகியவற்றினை அச்சடித்து வழங்கி வருகிறது. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நூலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் தேவைக்கு இந்த அச்சகம் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் அச்சகத்திற்கு வட்டியில்லாக் கடனாக ரூ.12.45 லட்சம் அனுமதிக்கப்பட்டு ரூ.3.42 லட்சம் சொந்த நிதியினைக் கொண்டு இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் 182 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், 5 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளுக்குரிய கம்ப்யூட்டர் சீட் தற்போது நிறுவியுள்ள எந்திரத்தின் மூலம் அச்சடித்து வழங்க இயலும். மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் 23 அச்சகங்களில், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு அச்சகத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூ.301 லட்சம் வியாபார குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், பிப்ரவரி வரை குறியீட்டில் ரூ.529.23 லட்சம் எய்தி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் எம்.பி., ஸ்ரீவில்லிபுத்தூர்சந்திரபிரபா எம்.எல்.ஏ., கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சித்திக், கூட்டுறவு துணைப்பதிவாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.