நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்ட பேராசிரியர் மதுரை கோர்ட்டில் சரண்

நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பேராசிரியர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்ட பேராசிரியர் மதுரை கோர்ட்டில் சரண்
Published on

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, அந்த கல்லூரி மாணவிகள் சிலரை தவறான வழியில் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் வற்புறுத்தினார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகனை கைது செய்தனர்.

இந்த நிலையில், நேற்று மதுரை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கருப்பசாமி சரணடைந்தார். அவரை நாளை (27-ந்தேதி) வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு சபீனா உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

நிர்மலாதேவி போலீசாரிடம் சிக்கியதுமே கருப்பசாமி தலைமறைவானார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள நாடாகுளம் கிராமம் ஆகும். அவர் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடைய தந்தை சேகர் விவசாயம் செய்கிறார். அவர் நாடாகுளத்தில் உள்ளார்.

கருப்பசாமியின் மனைவி கனகமணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கருப்பசாமியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com