ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

பவித்ர உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவித்ர உற்சவம் எனப்படும் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு இந்த உற்சவம் கடந்த 2-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. பவித்ர உற்சவ காலத்தில் மூலவர் மற்றும் உற்சவர் மீது நூல் இலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

இந்த உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோவில் கொடி மரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்திற்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தின் 7-ம் திருநாளன்று இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். அதன் பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவுநாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். சந்திரபுஷ்கரணியில் தண்ணீர் இல்லாததால் குளத்தின் படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பாத்திரத்தில் புனித நீர் சேகரிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். அங்கு மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பின்னர் பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com