

மும்பை,
மராட்டிய பா.ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஆளும் பா.ஜனதா அரசு குறித்தே விமர்சனம் வெளியானது. அரைகுறை ஆங்கிலத்தில் வெளியான அரசு குறித்த விமர்சனத்தில், வேலைவாய்ப்பில் பா.ஜனதா செயல்பாடு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
இதில் மராட்டியத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு தற்போது உள்ள 30 சதவீதம் ஊழியர்களை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது மராட்டியத்தில் உருவாக்குவோம் திட்டமா? அல்லது மராட்டியத்தை ஏமாற்றுவதற்கான திட்டமா? என இந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநில பா.ஜனதா, இந்த சர்ச்சை கருத்தை நாங்கள் பதிவு செய்யவில்லை என்று மறுத்துள்ளது. யாரோ மர்ம நபர் தங்களின் வலைதள பக்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி அரசு பற்றி அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பா.ஜனதா சார்பில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பா.ஜனதாவின் வலைதள பக்கத்தை தவறாக பயன்படுத்தியவரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.