ஆன்-லைனில் வழிபாடுகள் ஒளிபரப்பப்பட்டது சிவன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சனிபிரதோஷ விழா

ஆன்-லைனில் வழிபாடுகள் ஒளிபரப்பப்பட்டது சிவன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சனிபிரதோஷ விழா அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
ஆன்-லைனில் வழிபாடுகள் ஒளிபரப்பப்பட்டது சிவன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சனிபிரதோஷ விழா
Published on

சென்னை,

சிவாலயங்களில் மாதம் இருமுறை நடக்கும் பிரதோஷ விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சனிக்கிழமை வரும் சனிப்பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இந்த சனிப்பிரதோஷ நாளில் நந்தியம் பெருமானை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஓடிப்போகும் என்பது நம்பிக்கையாகும்.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, பிரதோஷ நாயனார் கோவில் வளாகத்திற்கு உள்ளே புறப்பாடு நடந்தது. கொரோனா பரவல் தடுப்புக்காக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் மயிலாப்பூர் கற்பகம்மாள் சமேத கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜர் சாமி கோவில், திருவேற்காடு பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இணையதளம் மூலம் பிரதோஷ வழிபாடுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதனை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கண்டுகளித்தனர். மாறாக கோவில்களுக்கு உள்ளே பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com