

விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு மதுரா சாமியாடி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வரும் கல்வியாண்டில் சிறுவர், சிறுமிகளை சேர்க்குமாறு இங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் தேவகி, உதவி தலைமை ஆசிரியர் இளமதி, சத்துணவு அமைப்பாளர் சரளா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செல்வராசு ஆகியோர் கடந்த வாரம் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தாம்பூலம் வைத்து அழைத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதற்காக பள்ளியில் புதியதாக சேர உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு கிராம மக்கள் பழங்கள், கல்வி உபகரணங்களை சீர்வரிசை பொருட்களாக கொடுத்தனர்.
அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளை ஓரிடத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்க அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி வரவேற்றார். தொடர்ந்து, மாணவர்களின் சேர்க்கை நடந்தது. இதில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பாபு கலந்துகொண்டு, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லில் மாணவர்களின் கையை பிடித்து எழுதி கற்றுக்கொடுத்து மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
மேலும் பள்ளியில் உள்ள சலுகைகள் மற்றும் எதிர்காலங்களில் வரும் மாற்றங்கள் குறித்தும் விளக்கி பேசினார். அதோடு கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக கொடுத்து சிறுவர், சிறுமிகளை அரசு பள்ளியில் சேர்த்த பெற்றோர்களுக்கும், கிராம மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.