புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை
Published on

புதுச்சேரி,

புதுவையில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. தொற்று பரிசோதனையில் முதல் 50 நாட்கள் வரை 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் தொற்றுவேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

அடித்தட்டு மக்கள் முதல் டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார் என பலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியதால் முதல்-அமைச்சர் அலுவலகம் மூடப்பட்டது. அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு சட்டசபை மூடப்பட்டு அதன்பிறகு வழக்கம்போல் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்பட்டது. ஆளுநர் கிரண் பேடிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவுகள் வெளிவந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com