லால்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

லால்குடியை அடுத்த சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
லால்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

லால்குடி,

லால்குடியை அடுத்த சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றிட, மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். மேலும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் சோலைமுருகன் ஆகியோரால் முன்னதாகவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதை தாங்களாகவே முன்வந்து அகற்றிட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட முன்வராததால் நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் லாரிகள், பொக்லைன் எந்திரம் உதவியுடன் நேற்று அன்பிலை அடுத்த ஜங்கமராஜபுரத்தில் இருந்து சிறுதையூர் வரை உள்ள வீடுகள், கடைகள், தடுப்புகள், சாலை ஓரம் உள்ள வயல் தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் போது லால்குடி மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், அன்பில் பகுதி வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி மற்றும் அன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, மணக்கால் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com