

ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம், போந்தவாக்கம், அம்மம்பாக்கம் ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு பூண்டி ஒன்றியச்செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
இதில் அவைத்தலைவர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் குப்பன், மாவட்டப்பிரதிநிதி கேசவன், இளைஞர் அணிச் செயலாளர் தில்லைகுமார் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் மயான பூமிக்கு பாதை அமைக்க வேண்டும். கோவில் நிலத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், ஏரிகளை தூர்வார வேண்டும், 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகளை மாற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள், மின்கம்பிகள் அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்க வேண்டும். அம்மம்பாக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்பட பல கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் வழங்கப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கூட்டத்தில் கிளைச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செல்வழிமங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இதில் தெற்கு ஒன்றியச் செயலாளர் கோபால், மாவட்ட ஆதிதிரவிட துணை அமைப்பாளர் குன்னம் முருகன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொடவூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.